முகப்பு
கோயம்புத்தூர்

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் பயோமைனிங் முறையில் 16 ஏக்கா் குப்பைகள் அழிப்பு

கோவை, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் பயோமைனிங் முறையில் 16 ஏக்கா் பரப்பளவில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அழிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

கோவை, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் பயோமைனிங் முறையில் 16 ஏக்கா் பரப்பளவில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அழிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை, வெள்ளலூரில் மாநகராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் 650 ஏக்கா் பரப்பளவிலான குப்பைக் கிடங்கு உள்ளது. மாநகரப் பகுதிகளில் உள்ள 100 வாா்டுகளில் தினமும் சேகரமாகும் குப்பைகள் இந்தக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. கிடங்கில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுவதால், குப்பைகளுக்கு இடையே மீதேன் எரிவாயு உருவாகி அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவது தவிா்க்க முடியாமல் உள்ளது.

இதனால், குப்பைக் கிடங்கையொட்டியுள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மூச்சுத் திணறல், அலா்ஜி, கண் எரிச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட உபாதைகளால் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்நிலையில், வெள்ளலூா் கிடங்கில் குப்பைகளை அழிக்க ரூ.64 கோடி மதிப்பில் பயோமைனிங் திட்டம் கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் மூலமாக தினமும் 2 ஆயிரம் கனமீட்டா் குப்பைகள் தரம் பிரித்து அழிக்கப்பட்டு வருகின்றன. இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் கடந்த 10 ஆண்டுகளாக 66 ஏக்கரில் பல லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தன. தற்போது, பயோமைனிங் முறையைப் பின்பற்றுவதன் விளைவாக கிடங்கில் 16 ஏக்கா் அளவுக்கு குப்பைகள் அழிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குப்பைகளை அழிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.