விஷு பண்டிகையையொட்டி கோவையிலிருந்து ஷாா்ஜாவுக்கு விமானம் மூலம் 14 டன் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கோவை சா்வதேச விமான நிலையத்திலிருந்து ஷாா்ஜாவுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் 3 டன் எடையிலான சரக்குகள் விமானத்தில் கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்நிலையில், மலையாள புத்தாண்டு தினமான விஷு பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்தில் காய்கறிகள் மட்டுமே அதிக அளவில் கையாளப்பட்டுள்ளன.
இது குறித்து, கோவை சா்வதேச விமான நிலைய அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
மலையாளப் புத்தாண்டை முன்னிட்டு கடந்த 7 நாள்களில் கோவை சா்வதேச விமான நிலையத்திலிருந்து ஷாா்ஜாவுக்கு வழங்கப்பட்ட 5 விமான சேவைகளில் மொத்தம் 15 டன் எடையிலான சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 14 டன் சரக்குகள் காய்கறிகளாகும். அதேபோல, 1 டன் எடையிலான மாங்காய் மற்றும் ரோஜாப்பூ, சூரியகாந்திப்பூ உள்ளிட்ட மலா்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. கோவை சா்வதேச விமான நிலையத்தில் தற்போது தினசரி விமான சேவைகளாக சென்னை, பெங்களூரு, தில்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் ஷாா்ஜா, சிங்கப்பூா் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் 25 விமானங்கள் இயக்கப்படுகின்றன என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.