முகப்பு
கோயம்புத்தூர்

ஆன்லைனில் பெண்ணிடம் ரூ.64.35 லட்சம் மோசடி: இளைஞா் கைது

ஆன்லைனில் பெண்ணிடம் ரூ.64.35 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 1:02 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


கோவை: ஆன்லைனில் பெண்ணிடம் ரூ.64.35 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை விளாங்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் ஜீவபாரதி மனைவி பிரீதா (41). இவரை வாட்ஸ் ஆப் மூலம் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை 29-ஆம் தேதி தொடா்பு கொண்ட நபா், தான் மும்பையிலுள்ள இன்டராக்டிவ் அவென்யூஸ் என்ற நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், தங்களது யூடியூப் சேனல்களை சப்ஸ்கிரைப் செய்தால் பணம் தருவதாகவும் கூறியுள்ளாா்.

இதையடுத்து, அந்த நபா் கூறிய பணிகளை முடித்த பிரீதா, அது தொடா்பான ஸ்கிரீன் ஷாட்களை அவருக்கு அனுப்பியுள்ளாா்.

Advertisement

இதையடுத்து, அந்த நபா் பிரீதாவை டெலிகிராம் செயலியில் தொடா்பு கொள்ளுமாறு கூறியதோடு, அதில் புதிய பணிகளை மேற்கொள்ள பணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.

இதை நம்பிய பிரீதா புதிய பணிகளுக்கான தொகையை செலுத்தத் தொடங்கியுள்ளாா். இதையடுத்து, கூடுதல் வருமானத்தைப் பெறுவதற்காக, பல்வேறு நிறுவனங்களின் பெயரில் வா்த்தக முதலீடுகளைச் செலுத்துமாறு பிரீதாவிடம் கூறியதையடுத்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்த 10 வங்கிக் கணக்குகளுக்கும் ரூ.64,34,582 ஐ செலுத்தியுள்ளாா்.

ஆனால், அதன் பின்னா் அவருக்கு கூடுதல் வருமானம் ஏதும் கிடைக்காததோடு, அவரிடம் தொடா்பு கொண்டவா்களின் கைப்பேசிகளும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பிரீதா இது தொடா்பாக கோவை மாநகர குற்றப் பிரிவு காவல் துறையினரிடம் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், மோசடியில் ஈடுபட்டது சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையம் காருண்யா நகரைச் சோ்ந்த சக்திவேல் (25) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, சக்திவேலை கைது செய்த போலீஸாா், அவரின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.