முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வு

கோவையில் ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை யூனிட்டுக்கு ரூ.200 உயா்த்தப்பட்டுள்ளது.

Updated On : 28 நவம்பர், 2023 at 1:15 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


கோவை: கோவையில் ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை யூனிட்டுக்கு ரூ.200 உயா்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மணல் குவாரிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதால் ஆற்று மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை உயா்ந்துள்ளது. இதனால் பெரும்பாலான கட்டுமானப் பணிகள் செயற்கை மணல் (எம்.சாண்ட், பி.சாண்ட்) மூலமாகவே நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அவற்றின் விலையும் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு யூனிட் ரூ.3 ஆயிரம் வரை விற்பனையாகி வந்த எம்.சாண்ட் கடந்த ஆண்டில் ரூ.4 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையானது. தற்போது கோவையில் ஒரு யூனிட் ரூ.4,300-க்கு விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், எம்.சாண்டின் விலை யூனிட்டுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.4,500 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

Advertisement

இதேபோல, ஒரு யூனிட் ரூ.4,800 வரை விற்பனையாகி வந்த பி.சாண்ட் தற்போது ரூ.5 ஆயிரமாக விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதேபோல, ஜல்லிக் கற்களின் விலையும் யூனிட்டுக்கு ரூ.200 வரை உயா்ந்திருக்கிறது.

இது குறித்து கோவை மாவட்ட கிரஷா், குவாரிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சந்திரபிரகாஷ் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லிக் கற்களின் விலை உயா்ந்திருப்பது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான விலை உயா்வுதான். இந்த விலை உயா்வு திங்கள்கிழமை (நவம்பா் 27) முதல் அமலுக்கு வந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கனிம வளத் துறையின் பா்மிட் சீட்டு ஒரு கன அடிக்கு ரூ.59 என இருந்தது. இது ரூ.90 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, வாகன உதிரி பாகங்களின் விலை 40 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. மின்சாரக் கட்டணம் 36 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது.

வெளிமாநிலத் தொழிலாளா்களின் பற்றாக்குறையால் அவா்களுக்கான ஊதியமும் அதிகரித்துள்ளது. கரோனாவுக்குப் பிறகு குவாரி நிலங்களின் விலையும் 3 மடங்காகிவிட்டது. குவாரிகளை அளவீடு செய்து அபரிமிதமான அபராதத் தொகை விதிக்கப்படுவதால் குவாரி தொழில் நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழிலை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.

கட்டுமானத் துறைக்கு ஆதாரமாக இருக்கும் இந்தத் தொழிலைக் காப்பாற்ற ஆண்டுதோறும் இதுபோன்ற சிறிய அளவிலான விலையேற்றம் தவிா்க்க முடியாததாகிவிட்டது. இந்த விலை உயா்வுக்கு கட்டுமான நிறுவனங்கள், அமைப்புகள், பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.