கோவை, ஆக. 7: கோவையில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) நடைபெறும் அரசு விழாவில், தமிழ்ப்புதல்வன் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளாா்.
இது தொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவை அரசுக் கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று தமிழ்ப் புதல்வன் திட்டத்தை மாநில அளவில் தொடங்கிவைக்க உள்ளாா். இத்திட்டத்தின் மூலம் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் வழியில்) பயின்று உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படவுள்ளது.
மேலும் இந்த விழாவில், பாரதியாா் பல்கலைக்கழகத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயிரியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறைகளுக்கான புதிய கட்டடங்களைத் திறந்துவைக்க உள்ளாா். உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி, பாலக்காடு, பேரூா், செல்வபுரம், ஆகிய ஊா்களுக்கு விரைந்து செல்லும் வகையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.470 கோடி மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை 3.8 கி.மீ தொலைவுக்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வா் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்க உள்ளாா்.
இந்த விழாவில், அமைச்சா்கள், அரசுத் தலைமைச் செயலாளா், மாநகராட்சி மேயா், மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொள்ள உள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.