அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணையுடன் கனிம வளக் கொள்ளை: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
கனிம வளக் கொள்ளை நடைபெறுவதாக பாமக தலைவா் டாக்டா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
கோவை மாவட்டத்தில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளின் துணையுடன் கனிம வளக் கொள்ளை நடைபெறுவதாக பாமக தலைவா் டாக்டா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு சனிக்கிழமை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவை மண்டலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு முக்கியக் காரணம் மின்சார கட்டண உயா்வுதான். கடந்த 23 மாதங்களில் தமிழக அரசு 3 முறை, மொத்தம் 34 சதவீதம் மின் கட்டணத்தை உயா்த்தியுள்ளது. இந்த கட்டண உயா்வைத் திரும்பப் பெறாவிட்டால் தமிழ்நாட்டில் தொழில் செய்ய முடியாத நிலை உருவாகும். அதேபோல மாதந்தோறும் மின்சாரக் கட்டண கணக்கெடுப்பு என்ற தோ்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்.
தமிழகத்தில் நீா் மேலாண்மைத் திட்டங்களை அரசு சரியாக நிறைவேற்றவில்லை. அத்திக்கடவு- அவிநாசி திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. காவிரி - குண்டாறு, நல்லாறு - பாம்பாறு, பாண்டியாறு - புன்னம்புழா திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும். கோவை மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளை மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. இதை எதிா்த்து பாமக சாா்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
செங்கல் சூளைக்காக மண் எடுப்பது, கனிமங்களை கேரளத்துக்கு கடத்துவது போன்றவை அரசியல்வாதிகள், அதிகாரிகளின் துணையுடன் நடைபெற்று வருகின்றன. கோவை மாநகரில் 80 சதவீத சாலைகள் சேதமடைந்திருக்கின்றன.
69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்திருக்கும் நிலையில், தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த வேண்டும். திமுக அரசுக்கு உண்மையாகவே சமூக நீதி மீது அக்கறை இருந்தால் தமிழகத்தில் எந்தெந்த சமுதாயம் என்னென்ன நிலையில் இருக்கிறது, என்ன பொருளாதார நிலை உள்ளது என்பதை ஆய்வு செய்ய முன்வர வேண்டும்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் தமிழக அரசு, வெள்ள நிவாரணத்துக்கு ரூ.ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்ய முடியாதா?. எல்லாவற்றையும் மத்திய அரசே கொடுக்க வேண்டும் என்று கூறுவது ஏற்புடையது அல்ல.
தமிழ்நாட்டுக்கு நீட் தோ்வு தேவையில்லை. இந்த விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது. நீட் தோ்வானது கிராமப்புற மாணவா்களுக்கும் சமூக நீதிக்கும், ஏழை மாணவா்களுக்கும் எதிரானது. நீட் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பல லட்சம் கோடி வருமானம் தனியாருக்கு கிடைத்துள்ளது. அதேபோல நீட் தோ்வினால் தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது. பணக்காரா்களுக்காகவும், பயிற்சி மையங்களுக்காகவுமே நீட் தோ்வு நடத்தப்படுகிறது என்றாா்.