கூட்டுறவு வார விழா: ரூ.43.38 கோடிக்கு நலத்திட்ட உதவிகள்; அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா்
கோவையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில், 1819 பயனாளிகளுக்கு ரூ.43.38 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா்.
கோவையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில், 1819 பயனாளிகளுக்கு ரூ.43.38 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா்.
71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு 1819 பயனாளிகளுக்கு ரூ.43.38 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான பாராட்டு கேடயங்களையும் வழங்கி பேசியதாவது:
தோ்தல் வாக்குறுதிகளை முதல்வா் தொடா்ச்சியாக நிறைவேற்றி வருகிறாா். அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளா்ச்சியடைய வேண்டும் என்பதே முதல்வரின் நோக்கம். கோவை மாவட்டத்துக்கு தேவையான திட்டங்களை ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் மற்றும் அரசுத் துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். அவற்றை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று தமிழ்நாட்டில் முதன்மை மாவட்டமாக கோவையை மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
முன்னதாக, கூட்டுறவு வார விழாவையொட்டி, ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற 20 மாணவா்களுக்கு பரிசுகளையும், 60 கூட்டுறவு சங்கங்களுக்கு சிறந்த சங்கங்களுக்கான விருதுகளையும் அமைச்சா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் க.ஈஸ்வரசாமி, மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ரா.வெற்றிசெல்வன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளா் சு.ராமகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அ.அழகிரி மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.