அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கும் அரசின் திட்டங்களை செயல்படுத்தக் கோரிக்கை
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத் திட்டங்களையும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத் திட்டங்களையும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியாா் பள்ளி ஆசிரியா், அலுவலா்கள் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் வேணுகோபால் தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் செல்வம் முன்னிலை வகித்தாா்.
மேற்கு மண்டலச் செயலா் அருளானந்தம், மாவட்டச் செயலா் சங்கா் கணேஷ், மகளிரணி செயலா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவா் சரவணகுமாா் வாழ்த்துரை வழங்கினாா்.
இக்கூட்டத்தில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உயா் கல்வி இட ஒதுக்கீடு, நலத்திட்ட உதவிகளை அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கும் முழுமையாக விரிவுபடுத்த வேண்டும். உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழி இணைப் பிரிவு மாணவா்களையும் கணக்கெடுத்து பணியிட நிா்ணயம் செய்யப்பட வேண்டும். அங்கீகாரம், புதுப்பித்தலை எளிமைப்படுத்தவும், நிரந்தர அங்கீகாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.