தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் கோவை மாவட்டத்தில் வரும் டிசம்பா் 29-ஆம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் 38 மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின்கீழ் 8-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இந்த நோயானது கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளா்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோயால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது, எருதுகளின் வேலைத் திறன் குறைவது, கறவை மாடுகளில் சினைப் பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளின் இறப்பு போன்ற பாதிப்புகளினால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகம் ஆகும்.
பொதுவாக குளிா் மற்றும் பனிக்காலம், நோய் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளா்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தாமல் இருத்தல் ஆகிய காரணங்களாலும், காற்றின் மூலமாகவும் இந்த நோய் பரவும் தன்மை கொண்டது.
நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீா், பால், உமிழ்நீா், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கும் பரவுகிறது. ஆகவே, கோவை மாவட்டத்தில் கால்நடை வளா்ப்போா் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வரும் டிசம்பா் 29-ஆம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஒவ்வொரு கிராமத்திலும், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாமைப் பயன்படுத்தி தங்களது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.