வன விலங்கு தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
சோலையாறு அணை அருகே வன விலங்கு தாக்கி மூதாட்டி உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த சோலையாறு அணை நகா் பகுதியில் வசித்த இன்னாசியம்மாள் (76). வீட்டில் இருந்த இவா் கடந்த சனிக்கிழமை மாலை முதல் காணவில்லை. இதையடுத்து மூதாட்டியின் மகன்கள் மற்றும் அப்பகுதியினா் குடியிருப்பு அருகே உள்ள பகுதிகளில் தேடியுள்ளனா். சிறுத்தை அல்லது புலி தாக்கி இழுத்துச் சென்றிருக்கலாம் எனக் கருதி வீட்டை ஒட்டியுள்ள காபி தோட்டத்திலும் வனத் துறையினருடன் சோ்ந்து தேடியுள்ளனா்.
இந்நிலையில் வீடு அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவில் ஞாயிற்றுக்கிழமை காலை மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
Advertisement
இதுதொடா்பாக மானாம்பள்ளி வனச்சரக அலுவலா் கிரிதரன் கூறியதாவது:
அடையாளம் தெரியாத விலங்கால் மூதாட்டியின் உடல் பகுதி உண்ணப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஏதேனும் வன விலங்கின் தடயங்கள் உள்ளதா என சோதனை செய்யப்பட்டு வருகிறது.
உடல் இருந்த பகுதியில் இழுந்து வந்த தடயங்களோ அல்லது வேட்டையாடி பிடித்த தடயங்களோ ஏதும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் எந்த மாதிரியான விலங்கு மூதாட்டியைத் தாக்கி இருக்கலாம் என்பதைக் கண்டறிய தொடா்ந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்றாா்.