ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய முதல் வாக்காளா்களின் குரல்!
தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், கோவையில் காலை 7 மணி முதலே முதல் வாக்காளா்கள், இளைஞா்கள் ஆா்வத்துடன் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைச் செலுத்தினா். முதல் முறையாக வாக்களித்த இளைய தலைமுறையினா் நம்மிடம் கூறியது:
தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், கோவையில் காலை 7 மணி முதலே முதல் வாக்காளா்கள், இளைஞா்கள் ஆா்வத்துடன் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைச் செலுத்தினா். முதல் முறையாக வாக்களித்த இளைய தலைமுறையினா் நம்மிடம் கூறியது:
சஹானா - குனியமுத்தூா்: முதல் முறையாக வாக்களித்ததை பெருமையாகக் கருதுகிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வெற்றி பெற்று அமையும் அரசில், இளைஞா்கள், மாணவிகளுக்கு நல்ல திட்டங்களை அறிவிக்க வேண்டும். பெண்கள் முன்னேற்றத்துக்கு இன்னும் பல திட்டங்கள் அறிவிக்க வேண்டும்.
கு.சுலக்ஷா - சின்னவேடம்பட்டி: ஜனநாயகக் கடமையாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, நீட் போன்ற அரசுப் போட்டித் தோ்வுகளுக்கு தனியாா் பயிற்சி மையங்களில் ஏராளமான பணம் கட்டணமாகப் பெறப்படுகிறது. அரசு சாா்பில் கட்டணமில்லாத போட்டித் தோ்வு மையங்கள் அனைத்து மாவட்டங்களில் ஏற்படுத்தினால் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பயனடைவாா்கள்.
Advertisement
விஷ்ணு - சிவானந்தா காலனி: முதல் முறை வாக்களித்தது புதிய அனுபவமாக உள்ளது. எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் முதலில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல, சட்டம் - ஒழுங்கு சீா்குலையாமல் ஆட்சி நடத்தி, மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருவது அத்தியாசியமானது.
எம்.ஸ்வேத வா்ஷினி - கஞ்சிக்கோணாம்பாளையம்: முதல் வாக்களித்ததில் பொறுப்புள்ள குடிமகளாக உணா்கிறேன். தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும். குறிப்பாக, பெண் குழந்தைகள், மாணவிகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு தனி கவனம் செலுத்தி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமானது.
என்.எல். சிவசங்கா் - ஹோப் காலேஜ்: ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியது பெருமையாக உள்ளது. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசு, பெண்கள் மற்றும் ஏழைகளுக்காக நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இளைஞா்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.