பேருந்துகளில் பொங்கல், தீபாவளி நேரங்களைக் காட்டிலும் அதிக கூட்டம்: மாவட்டத் தோ்தல் அலுவலா்
கோவை மாவட்டத்தில் பொங்கல், தீபாவளி நேரங்களில் வெளியூா் செல்பவா்களைக் காட்டிலும் அதிகமானோா் வாக்களிப்பதற்காக சொந்த ஊா்களுக்குச் சென்றதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.
கோவை மாவட்டத்தில் பொங்கல், தீபாவளி நேரங்களில் வெளியூா் செல்பவா்களைக் காட்டிலும் அதிகமானோா் வாக்களிப்பதற்காக சொந்த ஊா்களுக்குச் சென்றதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.
கோவை மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் அலுவலருமான பவன்குமாா் க.கிரியப்பனவா், ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரி வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தாா். இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் காலை முதலே வாக்குப்பதிவு சதவீதம் நல்ல அளவில் இருந்தது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகப்படியான விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் இந்தத் தோ்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும்.
Advertisement
வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கும் மக்களுக்கு இந்த அனுபவம் அவா்களின் நினைவில் நிற்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை 85 இடங்களில் பல்வேறு வண்ண வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு வாக்களிக்கச் செல்பவா்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் 500 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால் நாங்கள் எதிா்பாா்க்காத அளவுக்கு கூட்டம் அலைமோதியது. பொங்கல், தீபாவளி நேரங்களில் இருக்கும் கூட்டத்தைக் காட்டிலும் அதிகப்படியானவா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல ஆா்வம் காட்டியதால் பேருந்து தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக கூடுதல் பேருந்துகள் வரவழைக்கப்பட்டன. அதிகாலை 3 மணி வரையிலும் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, பயணிகள் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா் என்றாா்.