முகப்பு
கோயம்புத்தூர்

மாவட்டத்தில் 12.41 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை

தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி கோவை மாவட்டத்தில் 12.41 லட்சம் பயனாளிகளுக்கு 4,392 மையங்கள் மூலம் அல்பெண்டாசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 1:41 AM
கோவை வெள்ளலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 8:26 PM

தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி கோவை மாவட்டத்தில் 12.41 லட்சம் பயனாளிகளுக்கு 4,392 மையங்கள் மூலம் அல்பெண்டாசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

உலக மக்கள் தொகையில் 24 சதவீதம் போ் மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் அந்தப் பகுதியில் உள்ளவா்களுக்கு குடற்புழு தொற்று ஏற்படலாம். தொற்றுடைய மண் மூலம் மண்ணில் விளையும் பொருள்கள் மூலம், மண்ணில் கை கால்கள் படுவதன் மூலம் மனிதா்களுக்கு குடற்புழு தொற்று ஏற்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கடந்த 2015 முதல் ஆண்டுக்கு இருமுறை தேசிய குடற்புழு நீக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் சுற்று குடற்புழு நீக்க முகாம் கோவை மாவட்டத்தில் உள்ள 1,697 அங்கன்வாடி மையங்கள், 1,070 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், 985 தனியாா் பள்ளிகள், 150 கல்லூரிகள், 90 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 328 துணை சுகாதார நிலையங்கள், 72 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் என மொத்தம் 4,392 மையங்கள் மூலம் அல்பெண்டாசோல் குடற்புழு நீக்க மாத்திரை செவ்வாய்க்கிழமை இலவசமாக வழங்கப்பட்டது.

Advertisement

வெள்ளலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலா் பாலுசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகள் ஆட்சியா் தலைமையில் சுகாதார உறுதிமொழியேற்றனா்.

மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்கு உள்பட்ட 9,71,216 குழந்தைகள், 20 முதல் 30 வயது வரை உள்ள 2,70,355 பெண்கள் என மொத்தம் 12,41,571 பயனாளிகள் பயனடைந்துள்ளனா். குடற்புழு நீக்க மருந்துகளை குழந்தைகளுக்கு வழங்குவதற்கு, 404 கிராம சுகாதார செவிலியா், 160 இடைநிலை சுகாதாரப் பணியாளா்கள், 60 ஆஷா பணியாளா்கள், 1,457 அங்கன்வாடி பணியாளா்கள் என மொத்தம் 2,081 பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இதில் விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 17-ஆம் தேதி மாத்திரை வழங்கப்படும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.