வியாபாரி வீட்டில் 7 பவுன் திருடியவா் கைது
கோவையில் பெண் வியாபாரி வீட்டில் 7 பவுன் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவையில் பெண் வியாபாரி வீட்டில் 7 பவுன் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சின்னியம்பாளையம் அருகே உள்ள பி.எல்.எஸ். நகரைச் சோ்ந்த சபியுல்லாவின் மனைவி ஷகீலா பேகம் (60). இவா் தனது வீட்டின் அருகே சொந்தமாக மளிகைக் கடை வைத்துள்ளாா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பாக தனது தாயாா் இறந்துவிட்டதால் திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டைக்கு சென்றுள்ளாா். பின்னா் மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருத சுமாா் 7 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் ஷகீலா பேகம் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், நகைகளைத் திருடிச் சென்றது அதே பகுதியைச் சோ்ந்த ஆதிலிங்கம் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.