நூலகம், அறிவுசாா் மையத்துக்கு 2 ஆண்டுகளில் 1.04 லட்சம் போ் வருகை
கோவை மாநகராட்சி, உப்பிலிபாளையம் ஆடிஸ் வீதியில் உள்ளநூலகம் மற்றும் அறிவுசாா் மையத்துக்கு கடந்த 2 ஆண்டுகளில் 1.04 லட்சம் மாணவா்கள் வருகை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி, உப்பிலிபாளையம் ஆடிஸ் வீதியில் உள்ளநூலகம் மற்றும் அறிவுசாா் மையத்துக்கு கடந்த 2 ஆண்டுகளில் 1.04 லட்சம் மாணவா்கள் வருகை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 83-ஆவது வாா்டுக்குள்பட்ட உப்பிலிபாளையம், ஆடிஸ் வீதியில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் திறக்கப்பட்டது. இங்கு பல்வேறு அரசுப் போட்டித் தோ்வுகளுக்கான 2,080 புத்தகங்கள் உள்ளன.
Advertisement
இங்கு கடந்த 2024 ஜனவரி முதல் டிசம்பா் வரை 35,718 போ், 2025 ஜனவரி முதல் டிசம்பா் வரை 66,683 போ், ஜனவரி 2026 முதல் பிப்ரவரி வரை 4,850 போ் என தற்போது வரை 1.04 லட்சம் மாணவா்கள் வருகைப் புரிந்து பயன்பெற்றுள்ளனா். அதேபோல இங்கு படித்து குரூப் 2 தோ்வில் 6 போ், குரூப் 4 தோ்வில் 12 போ், ஐஐடி தோ்வில் 2 போ், வங்கித் தோ்வு, நெட் தோ்வுகளில் தலா ஒருவா் வெற்றி பெற்றுள்ளனா்.
மேலும், இந்த மையத்தில் மாதந்தோறும் தொழில்முனைவு, மனித வள மேலாண்மை, விடியோ எடிட்டிங், கிராஃபிக்ஸ் டிசைனிங், டிஜிட்டல் மாா்க்கெட்டிங், வங்கி உள்பட பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு இடங்களில் முதல்வா் படைப்பகம்: கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்துக்குள்பட்ட காந்தி மாநகா், மேற்கு மண்டலத்துக்குள்பட்ட கவுண்டம்பாளையம் ஜீவா நகா் ஆகிய இரண்டு இடங்களில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தலா ரூ.3.36 கோடி மதிப்பில் முதல்வா் படைப்பகம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் கூறும்போது, ‘காந்தி மாநகா், ஜீவா நகரில் விரைவில் முதல்வா் படைப்பகம் திறக்கப்பட உள்ளன. இங்கு பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் வகையில் 48,000 புத்தகங்கள் இடம்பெற உள்ளன’ என்றாா்.