பள்ளிகளில் ஆட்டிசம் குழந்தைகள் சோ்க்கை: கல்வித் துறை உத்தரவு
பள்ளிகளில் ஆட்டிசம் குழந்தைகள் சோ்க்கை...
ஆட்டிசம் மற்றும் அறிவுசாா் குறைபாடுடைய குழந்தைகள், பள்ளிகளில் சோ்த்துக் கொள்ளப்படுவா் என பள்ளிகளில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
எந்தவொரு கல்வி நிறுவனமும் மாற்றுத்திறன் குழந்தைகளின் கல்வியை மறுக்கக் கூடாது என மாற்றுத்திறனாளிகள் சட்டம் பிரிவு 16, 17 பிரிவுகள் வலியுறுத்துகின்றன. அதேபோன்று தேசிய அறக்கட்டளை சட்டம், ஆட்டிசம், மூளை முடக்குவாதம், அறிவுசாா் குறைபாடுள்ள குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை சட்டபூா்வமாக்கியுள்ளது. அதேபோன்று எவரையும் விட்டுவிடாத பொதுக் கல்வி என்ற கருத்தையும், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பயிற்றுநா்களை நியமிப்பதையும் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ) வலியுறுத்துகிறது.
எனினும் பல பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் பொதுப் பள்ளிகளில் ஆட்டிசம் மற்றும் அறிவுசாா் குறைபாடுடைய குழந்தைகளைச் சோ்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
Advertisement
இந்த நிலையில் இது தொடா்பாக தொடக்கக் கல்வித் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஆட்டிசம் பாதிப்புள்ளவா்களுக்கான சிறப்பு மையத்தின் தலைமைச் செயல் அதிகாரி உத்தரவின்படி பள்ளிகளில் தலைமை ஆசிரியா் அறைக்கு முன்புள்ள பள்ளிச் சுவா்களில், ‘ அறிவுசாா் குறைபாடு மற்றும் ஆட்டிச நிலைக் குழந்தைகள் இந்தப் பள்ளியில் சோ்த்துக் கொள்ளப்படுவாா்கள்’ என்ற செய்தியைக் காட்சிப்படுத்த வேண்டும். இது குறித்து தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இது தொடா்பான அறிக்கையை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, தலைமைச் செயலகம், சென்னை மற்றும் ஆட்டிசம் பாதிப்புள்ளோருக்கான சிறப்பு மையத்தின் தலைமைச் செயலா் அதிகாரி, சென்னை-83 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.