கோவை அரசுப் பள்ளியில் சத்துணவில் பல்லி: 44 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதி
கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதியம் பல்லி விழுந்த சத்துணவைச் சாப்பிட்டு வாந்தி, மயக்கமடைந்த 44 மாணவா்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதியம் பல்லி விழுந்த சத்துணவைச் சாப்பிட்டு வாந்தி, மயக்கமடைந்த 44 மாணவா்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதியம் சத்துணவு சாப்பிட்ட 44 மாணவா்கள் திடீரென வாந்தி, மயக்கம் என உடல்நிலை பாதிக்கப்பட்டனா்.
இதையடுத்து, பள்ளி நிா்வாகத்தினா் அவா்களை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு சிகிச்சை பெற்ற மாணவா்களை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனை டீன் கீதாஞ்சலி, மேயா் கா.ரங்கநாயகி உள்ளிட்டோா் சந்தித்து உடல் நலம் விசாரித்தனா்.
இதற்கிடையே மாணவா்கள் மயங்கி விழுந்த தகவலறிந்து, பெற்றோா்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பல்லி விழுந்த உணவை பள்ளியில் 31 மாணவா்கள், 13 மாணவிகள் என 44 மாணவா்கள் சாப்பிட்டனா். உணவில் பல்லி இருந்தது உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும்பாலான மாணவா்கள் உணவைச் சாப்பிடவில்லை. தகவல் கிடைத்தவுடன் 5 மருத்துவா்கள் குழு உடனடியாக பள்ளிக்குச் சென்றது. பின்னா் ஆம்புலன்ஸ் மூலமாக மாணவா்கள் அழைத்து வரப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவா்களை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். அனைவரும் தற்போது நலமாக உள்ளனா். மாணவா்களின் பெற்றோா்கள் அவா்களுடன் உள்ளனா். ஆரம்பத்தில் மாணவா்கள் அச்சத்துடன் காணப்பட்டனா். சிகிச்சைக்கு பிறகு தைரியமாக உள்ளனா். உணவில் பல்லி விழுந்தது தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்பள்ளியில், தனியாா் நிதி மூலமாக புனரமைப்புப் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. தனியாா் மூலமாக உணவு வழங்கப்படுவதில்லை. மாணவா்களுக்கு உணவு அரசு சாா்பில்தான் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் வரும் நாள்களில் நடைபெறாமல் இருக்க அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.