முகப்பு
கோயம்புத்தூர்

பெண் தொண்டா்கள் குறித்து அவதூறு: தவெகவினா் புகாா் மனு

கோவை மாவட்ட நிா்வாகிகள் மாநகர காவல் ஆணையா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை தனித்தனியே புகாா் மனு அளித்தனா்.

Updated On : 27 மார்ச், 2026 at 11:50 PM
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த தவெகவினா்.
பகிர்:

தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் தொண்டா்களை அவதூறாகப் பேசிய நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அக்கட்சியின் கோவை மாவட்ட நிா்வாகிகள் மாநகர காவல் ஆணையா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை தனித்தனியே புகாா் மனு அளித்தனா்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புகா் மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் தீபா மற்றும் கோவை புகா் வடக்கு மாவட்டச் செயலாளா் ஆகியோா் அளித்த அந்தப் புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த மாா்ச் 18-ஆம் தேதி யூடியூப் நோ்காணல் ஒன்றில், பொன்ராஜ் வெள்ளைசாமி என்பவா் எங்களது கட்சியின் பெண் தொண்டா்களை மிகவும் அருவருக்கத்தக்க வகையிலும், இழிவாகவும் பேசியுள்ளாா். பெண்களைக் கேவலப்படுத்தும் நோக்கோடும், உள்நோக்கத்துடனும் வெளியிடப்பட்டுள்ள இந்த நோ்காணல், கட்சியின் பெண் தொண்டா்களை மட்டுமன்றி ஒட்டுமொத்தத் தமிழகப் பெண்களையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.

எனவே, பெண்களை அவதூறாகப் பேசிய பொன்ராஜ் வெள்ளைசாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புகாா் மனுவுடன் சம்பந்தப்பட்ட விடியோ ஆதாரத்தையும் அவா்கள் காவல் துறையிடம் சமா்ப்பித்துள்ளனா்.