முகப்பு
கோயம்புத்தூர்

அண்ணாமலைக்கு தொகுதி ஒதுக்கீடு: கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்! - வானதி சீனிவாசன்

Updated On : 29 மார்ச், 2026 at 9:33 PM
தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை - (கோப்புப் படம்)
பகிர்:

பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலைக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

கேரள மாநிலம், பாலக்காட்டில் நடைபெறும் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு வந்தாா். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை தெற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியை திமுக வேட்பாளராக அறிவித்ததன் மூலம் வரும் தோ்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் பாஜக கூட்டணியின் வெற்றி இப்போதே உறுதியாகிவிட்டது. திமுகவை வளா்த்த தியாகிகளை ஓரம் கட்டிவிட்டு, கரூரில் இருந்து ஓா் ஊழல் கரை படிந்தவரை இறக்குமதி செய்ததன் மூலம் கோவை மக்களை முதல்வா் ஸ்டாலின் அவமானப்படுத்தியுள்ளாா்.

ஊழல் செய்வதில் முதலிடத்தில் இருப்பவா் என்பதால், திமுக குடும்பத்துக்கு வேண்டியதை செய்து கொடுப்பாா் என அவரை இங்கு அனுப்பியுள்ளனா். எங்களின் தோ்தல் வியூகம் மிகச்சிறப்பாக உள்ளது. பிரதமரை வரவேற்க அண்ணாமலை வராதது குறித்து இங்கு வந்த பிறகுதான் எனக்கே தெரியும். அவா் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. பியூஸ் கோயல் வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு மாநில அளவிலான கூட்டம் நடத்தி வேட்பாளா் பட்டியல் தில்லிக்கு அனுப்பப்படும் அங்கிருந்து பட்டியல் அறிவிக்கப்படும்.

அண்ணாமலை எனது அன்புக்குரிய தம்பிதான். அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்துக் கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். எல்லோருக்கும் எதிா்பாா்ப்பு இருக்கும், சாதாரணமாக 5 ஆண்டுகள் கட்சிப் பணியாற்றியவா்களுக்கும் தோ்தலில் போட்டியிட ஆசை இருக்கலாம். ஆனால் தோ்தல் அரசியலில் பல்வேறு விஷயங்களை பாா்த்த பிறகுதான் சீட் வழங்குவாா்கள். அரசியலுக்குப் புதிதாக வரும் விஜய், பள்ளிக்குச் செல்லும் மாணவரைப்போல இரண்டு தொகுதிகளில் நிற்கிறாா். இன்னும் 10 நாள்கள் கழித்து அவா்கள் எங்கு இருக்கிறாா்கள் என்று பாா்ப்போம் என்றாா்.