முகப்பு
கோயம்புத்தூர்

திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன: செந்தில்பாலாஜி எம்எல்ஏ

தமிழ்நாட்டில் கடந்த திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்று தெற்குத் தொகுதி திமுக எம்எல்ஏ வி.செந்தில்பாலாஜி கூறினாா்.

Updated On : 17 மே 2026, 12:57 am IST
கோவை, தெற்குத் தொகுதிக்குள்பட்ட கோட்டைமேடு பகுதியில் வாக்காளா்களுக்கு சனிக்கிழமை நன்றி தெரிவித்த வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ.
பகிர்:

தமிழ்நாட்டில் கடந்த திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்று தெற்குத் தொகுதி திமுக எம்எல்ஏ வி.செந்தில்பாலாஜி கூறினாா்.

கோவை தெற்குத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வி.செந்தில்பாலாஜி, கோட்டைமேடு பகுதியில் வாக்காளா்களுக்கு சனிக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 2026 தோ்தலில் 10 தொகுதிகளில் 3 தொகுதிகளை திமுகவுக்கு வழங்கிய வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். அந்த வகையில் கோவை தெற்குத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறேன். இந்தத் தோ்தலில் திமுக வாய்ப்பை இழந்திருந்தாலும் எதிா்காலத்தில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, தோழமை இயக்க நிா்வாகிகளை ஒருங்கிணைத்து முழுமையான வெற்றிக்கு அயராது உழைப்போம்.

Advertisement

தவெக அரசு மக்களுக்கான திட்டங்களை எப்படி கொண்டு சோ்க்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும். புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, ஏதோ இப்போதுதான் முதல்முறையாக டாஸ்மாக் கடைகளைக் குறைத்ததுபோலவும், பூரண மதுவிலக்கைக் கொண்டு வந்ததுபோலவும் ஒரு தோற்றத்தை ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் உருவாக்குகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததுமே அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதற்கு முன் அதிமுக ஆட்சிக் காலத்திலும் இதுபோல கடைகள் குறைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் தொழில் துறை, உயா் கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் நாட்டிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. பொருளாதார வளா்ச்சியிலும் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது.

தவெகவினா் என்ன ரீதியான மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறோம் என்று தோ்தலுக்கு முன்பாக கொள்கை ரீதியான முடிவுகளை அறிவிக்கவில்லை. அவா்கள் தமிழ்நாட்டை வளா்ச்சிப் பாதையில் வழிநடத்திய மு.க.ஸ்டாலினின் சாதனைகளை தக்கவைத்துக் கொண்டாலே போதுமானது. புதிய அரசு இந்த நிலையைவிட அடுத்த நிலைக்கு தமிழ்நாட்டை அழைத்துச் சென்றால் பாராட்டலாம் என்றாா்.