ஈரோடு அருகே சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (31). இவர், கோபியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றபோது, அப்பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு படித்து வந்த அவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய விஜயகுமார், நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டார். மேலும், அச்சிறுமியை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்.
2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கோபி அனைத்து மகளிர் போலீஸார், கடத்திச் சென்ற விஜயகுமார், உடந்தையாக இருந்த நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த ரமேஷ் (41), கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜோசப்ராஜா (27) ஆகியோரைக் கைது செய்து ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு, சிறுமி கடத்தல், திருமணம் செய்தல், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதற்காக விஜயகுமாருக்குஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், உடந்தையாக இருந்த ரமேஷ், ஜோசப் ராஜாவுக்கும் ஆயுள் தண்டனை விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2 லட்சம் இழப்பிடு வழங்க தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தார்.