பெருந்துறையில் தொழிலாளியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ய முயன்ற சக தொழிலாளி புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி, காரியேந்தலைச் சேர்ந்தவர் கருப்புராஜா (23). விருதுநகர், காரியாப்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா (25). இருவரும், பெருந்துறையில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கட்டடத் தொழிலாளர்களாகப் பணிபுரிகின்றனர். கருப்புராஜா மற்றும் அவரது நண்பர்கள், முத்தையாவை அடிக்கடி கிண்டல் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இவர்கள் இருவருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நள்ளிரவு 12.30 மணியளவில் நீதிமன்ற வளாகத்தின் முன் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த கருப்புராஜாவின் தலையில், முத்தையா கருங்கல்லைப் போட்டு கொலை செய்ய முயன்றுள்ளார். இதில், கருப்புராஜாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து, கருப்புராஜா அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, முத்தையாவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.