கிணற்றில் தவறி விழுந்தவர் சாவு
கொடுமுடி அருகே உள்ள சிவகிரியில் கிணற்றில் தவறி விழுந்தவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
கொடுமுடி அருகே உள்ள சிவகிரியில் கிணற்றில் தவறி விழுந்தவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
முள்ளாம் பரப்பு பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (56). லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கு கொடுமுடி அருகே உள்ள சிவகிரி நம்ம கவுண்டன்புதூரில் விவசாய தோட்டம் உள்ளது. அங்கு கிணற்றுக்கு புதிதாக சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மூர்த்தி, அவரிடம் பணியாற்றும் மேச்சேரியைச் சேர்ந்த குப்புசாமி ஆகியோர் புதிதாக கட்டப்பட்ட கிணற்றின் சுற்றுச் சுவருக்கு வியாழக்கிழமை தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக குப்புசாமி கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
தகவலின்பேரில் சிவகிரி போலீஸார், கொடுமுடி தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இறங்கி குப்புசாமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு இறந்த நிலையில் குப்புசாமியின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து மலையம்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.