அட்சய திருதியை: நகைக் கடைகளில் அமோக விற்பனை
அட்சய திருதியை முன்னிட்டு ஈரோடு நகரிலுள்ள நகைக் கடைகளில் நகை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.
அட்சய திருதியை முன்னிட்டு ஈரோடு நகரிலுள்ள நகைக் கடைகளில் நகை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.
சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரக்கூடிய 3-ஆவது திருதியை வளர்பிறை வரும் நாள் அட்சய திருதி நாளாக அழைக்கப்படுகிறது. அக்ஷய என்ற சொல்லுக்கு சம்ஸ்கிருதத்தில் எப்போதும் குறையாது என்பது அர்த்தம். குறிப்பாக, தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட நகைகள், வைரம், இதர விலை மதிப்பற்ற கற்கள், வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை அதிகாலையில் நகைக் கடைகள் திறக்கப்பட்டதால் காலை 6 முதல் நகைக் கடைகளில் நகைகள் வாங்குவதற்காக மக்கள் திரண்டனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. பெரும்பாலான பெண்கள் குழந்தைகளுடன் நகை வாங்க வந்திருந்தனர். பொன் வீதி, ஆர்.கே.வி. சாலை, காவிரி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து நகைக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
மேலும், அட்சய திருதியை முன்னிட்டு எடை குறைவான நெக்லஸ், பேன்சி வளையல், கம்மல், மோதிரம், டாலர் செயின் உள்ளிட்ட பலவிதமான நகைகள், புதிய டிசைன்களில் விற்பனைக்காக குவிக்கப்பட்டு இருந்தன. செய்கூலி, சேதாரத்தில் சிறப்புத் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை நகைக் கடைகள் அறிவித்திருந்தன.
பெரிய நகைக் கடைகளில் பொதுமக்கள் சிரமமின்றி நகைகளை வாங்கிச் செல்ல வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தங்க நாணயம் மட்டும் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு மையம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரிசையில் நின்றபடி வாடிக்கையாளர்கள் தங்க நாணயங்களை வாங்கிச் சென்றனர்.
கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நகைக் கடைகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பல கடைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன.