முகப்பு
ஈரோடு

ஐஏஎஸ் பணிக்குத் தேர்வு பெற்ற ஈரோடு மாணவி

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் தேர்வில், ஈரோடு மாணவி அகில இந்திய அளவில் 106-ஆவது இடம் பிடித்து ஐஏஎஸ் பணிக்குத் தேர்வு பெற்றுள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் தேர்வில், ஈரோடு மாணவி அகில இந்திய அளவில் 106-ஆவது இடம் பிடித்து ஐஏஎஸ் பணிக்குத் தேர்வு பெற்றுள்ளார்.
 ஈரோடு, திருநகர் காலனியைச் சேர்ந்த ஜவுளி வணிகர் அசோக் - ஜெயமாலா தம்பதியரின் மூத்த மகள் ஏ.பிரியங்கா போத்ரா (25). இவர், அகில இந்திய அளவில் 106-வது இடம் பிடித்து  ஐ.ஏ.எஸ். பணிக்குத் தேர்வு பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவி பிரியங்கா போத்ராவுக்கு ஈரோடு ஜெயின் இண்டர்நேஷனல் வியாபாரிகள் அமைப்பின் தலைவர் பிரதீப் ஜெயின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. 
 விழாவில் பங்கேற்ற மாணவி பிரியங்கா போத்ரா கூறியதாவது:
 நான் ஈரோடு கிறிஸ்துஜோதி பள்ளிக் கூடத்தில் 10-ஆம் வகுப்பு வரையும், இந்தியன் பப்ளிக் பள்ளிக் கூடத்தில் பிளஸ்-1, பிளஸ்-2  படித்தேன். அதன் பின்னர் மும்பையில் உள்ள நர்சி மோன்ஜி கல்லூரியில் மேலாண்மை பட்டப் படிப்பை முடித்தேன். 2015-ஆம் ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படிக்கத் தொடங்கினேன். நான் பிளஸ்-1 படிக்கும்போதே எனக்குள் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உருவாக வேண்டும் என்ற எண்ணம்  தோன்றியது. இதற்கு, எனது அம்மா மிகவும் உறுதுணையாக இருந்தார். நான் எஸ்எஸ்எல்சி படிக்கும்போது அவர் தொலைதூரக் கல்வியில் பட்டம் படித்துக் கொண்டு இருந்தார். அவருக்கு கல்வியில் இருந்த ஆர்வம்  எனது லட்சியத்துக்கு  ஊக்கம் அளித்தது.
 சென்னை, பெங்களூரு, புதுதில்லி ஆகிய இடங்களில் உள்ள போட்டித் தேர்வு மையங்களுக்கு சென்று பயிற்சி பெற்றேன். முதல் முறை தேர்வு எழுதும்போது என்னால் வெற்றி பெற முடியவில்லை. அதன் பின்னர் கடின உழைப்பால் 2-ஆவது முறை தேர்வெழுதி  வெற்றி பெற்றுள்ளேன். அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு பெண்களின் முன்னேற்றத்தும், பெண்களுக்கும் சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க முயற்சிகள் செய்வேன் என்றார்.
 இந்நிகழ்ச்சியில், அமைப்பின் உறுப்பினர் பிரகாஷ் ஜெயின் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →