முகப்பு
ஈரோடு

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் பொங்கல் திருவிழா

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் பொங்கல் திருவிழா புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் பொங்கல் திருவிழா புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா பிப்ரவரி 13-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார வழிபாடுகளும், திருவீதி உலாவும் நடைபெற்று வந்தது. அம்மன் கருவறைக்குள் சென்று ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பால், மஞ்சள் நீரூற்றி செவ்வாய்க்கிழமை அபிஷேக வழிபாடு நடத்தினர். 
இதைத்தொடர்ந்து, அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி புதன்கிழமை காலை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள எல்லையம்மன் கோயிலிலிருந்து தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட குதிரையும், அம்மன் படைக்கலக் கருவிகளும் ஊர்வலமாக மேட்டூர் சாலை வழியாக கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டது. முன்னதாக, ஏராளமான பக்தர்கள் சேறு பூசியபடியும், பல்வேறு வேடங்களிலும் ஊர்வலமாகச் சென்றனர். 
அம்மன் அழைத்தலின்போது பொதுமக்கள் தங்கள் வாழ்வு செழிக்கவும், வியாபாரிகள் தங்களின் தொழில் சிறக்கவும் வேண்டி உப்பு, மிளகு, வாழைப் பழங்கள், தானியங்கள், சில்லறைக் காசுகளை வீசினர். தொடர்ந்து, ஊர்வலம் செல்லும் வழிகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. 
அம்மன் அழைத்தல் நிறைவடைந்ததும் பொங்கல் விழா தொடங்கியது. இதில், ஏராளமானோர் பொங்கல் வைத்து அம்மனுக்குப் படைத்து வழிபட்டனர். தொடர்ந்து, வேண்டுதலை நிறைவேற்ற ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என ஏராளமானோர் அலகு குத்தியபடி சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். 
விழாவையொட்டி, பவானி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. பவானி காவல் துணைக் கண்காணிப்பாளர் சார்லஸ் தலைமையில் ஆய்வாளர்கள் ரவி, இளங்கோ, கோவிந்தராஜு உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.  
விழாவின் தொடர்ச்சியாக, வியாழக்கிழமை காலை தேர்த் திருவிழாவும், கம்பம் பிடுங்குதலும் நடைபெறுகிறது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →