அரியப்பம்பாளையம் இறைச்சிக் கடை ஏலம் இரண்டாவது முறையாக ஒத்திவைப்பு
சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் செயல்பட்டுவந்த இறைச்சிக் கடை ஏலம் இரண்டாவது முறையாக மீண்டும் புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.
சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் செயல்பட்டுவந்த இறைச்சிக் கடை ஏலம் இரண்டாவது முறையாக மீண்டும் புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.
சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் கோழி, ஆட்டிறைச்சி மற்றும் மீன் இறைச்சிகள் என 14 கடைகள் செயல்பட்டு வந்தன. தற்போது இந்தக் கடைகளை மீண்டும் பொது ஏலத்தில்விட பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த ஏலத்தில் புதிதாக மேலும் 4 கடைகள் அமைக்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், அனைத்து ஏலதாரர்கள் முன்னிலையிலும் மார்ச் 22-ஆம் தேதி புதிதாக ஏலம் விட செயல் அலுவலர் கணேசன் நடவடிக்கை எடுத்தார். ஆனால், பழைய கடை உரிமைதாரருக்கே மீண்டும்
வழங்கவேண்டும் என ஒரு தரப்பினர் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஏலம் மார்ச் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஏலம் விடுவதற்கான நடவடிக்கையில் செயல் அலுவலர் கணேசன் புதன்கிழமை ஈடுபட்டார். ஆனால், பொது ஏலம் விடக்கூடாது என்றும், பழைய கடை உரிமைதாரருக்கே மீண்டும் கடை வழங்க வேண்டும் என்றும் இறைச்சிக் கடை அமைக்க பேரூராட்சி இடம் ஒதுக்க வேண்டும் என்றும் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனிடையே, நீண்டகாலமாக கடை நடத்தி வரும் பழைய கடை உரிமைதாரருக்கு உரிமை வழங்க வேண்டும் என சத்தியமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு, அதற்கான நோட்டீஸ் செயல் அலுவலருக்கு வழங்கப்பட்டதால் புதன்கிழமை நடைபெற இருந்த இறைச்சிக் கடைகளுக்கான பொது ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.