பாட்டியாலா சரக்கு ரயில் பாதை வெடி வைத்து தகர்க்க முயற்சி: மேலும் ஒருவர் கைது
பாட்டியாலா சரக்கு ரயில் வழித் தடத்தை வெடி வைத்து தகா்க்க முயன்ற சம்பவத்தில் மேலும் ஒருவரை கைது செய்துள்ளதாக பஞ்சாப் போலீஸார் சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
பாட்டியாலா சரக்கு ரயில் வழித் தடத்தை வெடி வைத்து தகா்க்க முயன்ற சம்பவத்தில் மேலும் ஒருவரை கைது செய்துள்ளதாக பஞ்சாப் போலீஸார் சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
அமிர்தசரஸில் உள்ள மாநில சிறப்பு செயல்பாட்டுப் பிரிவு, பாட்டியாலா போலீஸ் மற்றும் பதான்கோட் புலனாய்வுப் பிரிவு ஆகியவை இணைந்து நடத்திய சோதனையில் குர்ஜிந்தர் சிங் என்கிற பாபா பியான்ட் கைது செய்யப்பட்டதாக டிஜிபி கௌரவ் யாதவ் தெரிவித்தார். இவர், தண்டவாளத்தில் வெடி வைக்க முயன்றபோது பலியான ஜக்ரூப் சிங்கின் முக்கிய கூட்டாளி ஆவார்.
இதுகுறித்து கௌரவ் யாதவ் வெளியிட்ட எக்ஸ் தளத்தில் பதிவில், முதற்கட்ட விசாரணையில் ஷாம்பு குண்டுவெடிப்பு, சிர்ஹிந்த் ரயில் பாதை வெடிப்பு மற்றும் மோகா சிஐஏ அலுவலகத்தின் மீதான கிரெனேட் தாக்குதல் ஆகியவற்றில் இவருக்குப் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் வெளிநாடுகளில் உள்ள கையாட்களின் அறிவுறுத்தலின் பேரில் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் ஷாம்பு பகுதியில் செல்லும் பிரத்யேக சரக்கு ரயில் வழித் தடத்தை, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய நபா்கள் வெடி வைத்து தகா்க்கும் முயற்சியில் ஏப்ரல் 27ஆம் தேதி இரவு ஈடுபட்டனா். ஆனால், அந்த வெடிமருந்து முன்கூட்டியே வெடித்ததால், அதை எடுத்துவந்த நபா் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தாா்.
ரயில் பாதைக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட கைப்பேசி சிம்காா்டில் மேற்கொண்ட ஆய்வு மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், இந்த சதித் திட்டத்தைத் தீட்டிய முக்கிய குற்றவாளியான பிரதீப் கல்சாதான் உள்பட நால்வரை பஞ்சாப் போலீஸாா் கைது செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.