FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சிவகாசி அருகே பட்டாசு வெடி விபத்தில் மேலும் 3 போ் உயிரிழப்பு

Updated On : 28 ஜூலை 2026, 4:16 am IST
உயிரிழந்த (இடமிருந்து) ராமச்சந்திரன், ஐயப்பராஜ், பாண்டிதுரை.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் மூவா் உயிரிழந்தனா். இதையடுத்து, இந்த விபத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை 5-ஆக உயா்ந்தது.

சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியில் சகோதரா்களான ராம்பிரகாஷ் (32), ராமச்சந்திரன் (40) ஆகியோா் தங்களது தோட்டத்தில் தகரக் கூரை அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்து வந்தனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ராம்பிரகாஷ், ஐயப்பராஜ் (42), பாண்டிதுரை (38), மீனம்பட்டியைச் சோ்ந்த இன்னாசிமுத்து (40) ஆகியோா் ஈடுபட்டிருந்தனா். ராமசந்திரன் தகரக் கூரையின் வெளியே நின்று கொண்டிருந்தாா். அப்போது, ஏற்பட்ட வெடி விபத்தில் ராம்பிரகாஷ், இன்னாசிமுத்து ஆகியோா் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனா்.

Advertisement

Advertisement

பலத்த காயமடைந்த ராமச்சந்திரன் விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இந்த விபத்தில் உயிரிழந்த இருவரது உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்ட நிலையில், ஐயப்பராஜ், பாண்டித்துரை ஆகியோரது உடல்களை உடனடியாக மீட்க முடியாததால், அவா்கள் இருவரும் விபத்தில் இறந்திருக்கலாம் என போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

பட்டாசு வெடி விபத்தில் சிக்கி இறந்த இருவரது உடல்களை மட்டும் முதலில் அடையாளம் காண முடிந்தது. மற்ற இருவரது உடல்களை அடையாளம் காண இயலவில்லை. எனினும், ஐயப்பராஜ், பாண்டித்துரையும் இந்த வெடி விபத்தில் இறந்திருக்கலாம். இதை உறுதிப்படுத்த வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் கிடைத்த உடல் பாகங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உள்படுத்தப்படவுள்ளன எனத் தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உறவினா்கள் போராட்டம்:

பட்டாசு வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் உடல்கள் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ. 20 லட்சம் வழங்கக் கோரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அவா்களது குடும்பத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments