சென்னிமலை பூங்கா நகரில் எரிவாயு உருளைக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு
சென்னிமலை பூங்கா நகரில் புதியதாக அமையவுள்ள எரிவாயு உருளைக் கிடங்குக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி தரக் கூடாது என பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
சென்னிமலை பூங்கா நகரில் புதியதாக அமையவுள்ள எரிவாயு உருளைக் கிடங்குக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி தரக் கூடாது என பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில், மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் அளித்த மனு:
சென்னிமலை ஒன்றியம், முகாசிபிடாரியூர் ஊராட்சிக்கு உள்பட்ட பூங்கா நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இப்பகுதியில் புதியாக எரிவாயு உருளைக் கிடங்கு அமைப்பதாகத் தெரிகிறது.
இதுகுறித்து, அதிகாரிகள் ஆய்வு நடத்திச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குடியிருப்புப் பகுதியில் இந்தக் கிடங்கு அமைப்பதால் காற்று மாசு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும். மேலும், தீ விபத்துகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.
எனவே, பூங்கா நகர் பகுதியில் எரிவாயு உருளைக் கிடங்கு அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.