சேமித்து வைக்கும் முன்னரே விதை பரிசோதனை செய்ய வேண்டும்: வேளாண் துறை அறிவுறுத்தல்
விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் இருந்து விளைவிக்கப்பட்ட தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்றவற்றை விதைக்காக சேமிக்கும்போது அதன் தரத்தை பரிசோதனை
விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் இருந்து விளைவிக்கப்பட்ட தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்றவற்றை விதைக்காக சேமிக்கும்போது அதன் தரத்தை பரிசோதனை செய்து சேமித்து வைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, ஈரோடு விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் லோகநாதன் வெளியிட்டுள்ள தகவல்:
விதையின் தரம் என்பது முளைப்புத் திறன், புறத்தூய்மை, ஈரப்பதம், பிற ரக கலப்பு ஆகியவை ஆகும். அவற்றின் தரம் ஒவ்வோர் பயிர்களுக்கும் பயிர் வாரியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதை அறிந்து கொண்ட பிறகே சேமித்து வைக்க வேண்டும். உதாரணமாக விதையின் ஈரப்பதம் அதிகமாக இருப்பின், சேமிப்பில் இருக்கும்போதே பூச்சிநோய் தாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் முளைப்புத் திறன் வெகுவாக பாதிக்கப்பட்டு மகசூல் குறைகிறது. மேலும், அந்த விதைகளில் இருந்து வரும் பயிரானது வெகுவிரைவில் நோய்த் தாக்குதலுக்கு உட்படுகிறது.
இத்தகைய விதைகளைப் பயன்படுத்தும்போது நிலத்தில் இடப்படும் இடுபொருள் விரயமாகிறது. இதுபோன்ற புறத்தூய்மை, பிற ரக கலப்பு போன்ற அனைத்து காரணிகளிலும் தேர்ச்சி பெற்ற விதைகளையே உபயோகிக்க வேண்டும். பிற ரக கலப்பு என்பது ஒரே பயிரின் வேறு ரக விதைகள் கலந்திருப்பது. இது அதிகமாகும்போது விளை பொருளின் தரம் குறைந்து நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, இதைத் தவிர்க்க விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகளையும், விதை விற்பனையாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைகளையும், விதை பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து தரமான விதைகளைப் பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் தங்கள் விதைகளின் தரத்தை அறிய ஒரு மாதிரிக்கு ரூ. 30 கட்டணம் செலுத்தி அதன் முளைப்புத் திறன், ஈரப்பதம், பிற ரக கலப்பு, புறத் தூய்மை ஆகியவற்றை பரிசோதனை செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.