நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் ஏழாவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமிஅண்ணாதுரை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியதாவது:
மாற்றம் ஒன்றே மாறாதது, அதற்கேற்ப பல்வேறு மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. பொறியாளர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தங்களை சரியான முறையில் தயார்படுத்திக் கொண்டு, சவால்களை எதிர்கொண்டு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்றார்.
இதையடுத்து, கடந்த கல்வியாண்டில் இளங்கலைப் பிரிவில் தேர்ச்சி பெற்ற 377 மாணவர்கள் பட்டம் பெற்றனர். முன்னதாக, நந்தா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ஆ.விஜயகுமார் ஆண்சு அறிக்கை வாசித்தார். ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைச் செயலர் எஸ். நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், நந்தா கல்வி நிறுவனங்களின் ஆலோசகர் டாக்டர் எஸ்.பி.விஸ்வநாதன், முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.