முகப்பு
ஈரோடு

ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தொடங்கவுள்ள நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 6:50 AM
பகிர்:

ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தொடங்கவுள்ள நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் மணி வெளியிட்ட தகவல்:
ஈரோடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பட்டயப் பயிற்சி, கணினிப் பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், சுயதொழில் துவங்கவும், நகைக்கடன் வழங்கும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெறவும் வாய்ப்புள்ள நகை மதிப்பீட்டாளர் பயிற்சி இங்கு விரைவில் தொடங்கப்பட உள்ளது. 
இப்பயிற்சியில்,  அடிப்படை உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தைப் பற்றிய அடிப்படை விவரம், தங்கத்தின் விலையைக் கணக்கிடும் முறை, தங்கத்தை அழித்தும், அழிக்காமலும் தரம் அறியும் முறை, நகைகளின் வகைகளைக் கண்டறிதல், வங்கிகளில் நகைக்கடன் வழங்கும் முறை, ஹால்மார்க், அடகு பிடிப்போர் நடைமுறைச் சட்டம், விதிகள் போன்ற பாடங்கள் வகுப்பறையில் கற்பிக்கப்படுகின்றன.  
மேலும், தங்க நகை செய்தல், உரைகல்லின் மூலம் தங்கத்தின் தரத்தைக் கண்டறிந்து அதன் அடிப்படையில் வழங்க வேண்டிய கடன் தொகையை நிர்ணயிக்கும் முறை ஆகியவை செய்முறைப் பயிற்சியாக வழங்கப்படுகின்றன.   வகுப்பறைப் பாடம், செய்முறை பயிற்சி இரண்டும் சேர்ந்து மொத்தம் 100 மணி நேரத்துக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியின்போது, தங்க நகையின் தரம் கண்டறியத் தேவையான ரூ. 500 மதிப்புள்ள உரைகல், லென்ஸ் போன்ற கருவிகள் கட்டணமின்றி வழங்கப்படும்.  
பயிற்சியின் நிறைவில், தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும்.  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இப்பயிற்சிச் சான்றிதழைப் பதிவு செய்து கொள்ளலாம்.
இப்பயிற்சி பெற்றவர்கள் தேசிய வங்கிகள், வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நகைக்கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்ற வாய்ப்பு உள்ளது. மேலும்,  நகை அடகுக் கடை, நகைக்கடை, நகை வணிகம் போன்ற சுயதொழில்களையும்  மேற்கொள்ள முடியும்.
இப்பயிற்சி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில், வாரத்துக்கு இரண்டு நாட்கள் வீதம் 2 மாதங்களுக்கு நடைபெறும்.  குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயது நிறைவடைந்த இருபாலரும் பயிற்சியில் சேரலாம்.  
இதற்கான விண்ணப்பத்தையும், கூடுதல் விவரங்களையும், ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்-5 வாய்க்கால்மேடு, எஸ்.வி.என். பள்ளி கட்டடம் பின்புறம், கொங்கம்பாளையம் பிரிவு, சித்தோடு அஞ்சல், ஈரோடு - 638 102  என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0424 - 2535632,  97919 62646, 94439 90632  ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.