சத்தி - மேட்டூர் நெடுஞ்சாலையின் விரிவாக்கப் பணி: வெட்டி சாய்க்கப்படும் புளிய மரங்கள்
சத்தியமங்கலம் - அந்தியூர் - அம்மாபேட்டை - மேட்டூர் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோரங்களில் நிழலும், பலனும் அளித்து
சத்தியமங்கலம் - அந்தியூர் - அம்மாபேட்டை - மேட்டூர் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோரங்களில் நிழலும், பலனும் அளித்து வந்த புளியமரங்கள் வெட்டப்படுவது பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இச்சாலையின் விரிவாக்கப் பணியின் முதல்கட்டமாக அந்தியூர் முதல் அம்மாபேட்டை வரை 20 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்று வருகிறது. இச்சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வது புளிய மரங்களின் நிழலிலேயே பயணிப்பதாக உள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு களைப்போ, சிரமமோ இருக்காது. ஆயிரக்கணக்கான புளியமரங்கள் வழிநெடுகிலும் உள்ள நிலையில் இச்சாலைப் பயணம் ரம்மியமான நிழலில் சலிப்பில்லாமல் பயணிக்கச் செய்யும். ஆங்காங்கே மரத்தில் நிழலில் நின்று களைப்பைப் போக்கிக் கொண்டும் பயணத்தைத் தொடலாம்.
இச்சாலையோரத்தில் உள்ள புளியமரங்கள் சுமார் 60 ஆண்டுகள் ஆனவை. நிழலை மட்டுமல்ல ஆண்டுதோறும் புளியங்காய் ஏலம் மூலம் பல லட்சம் ரூபாய் வருமானத்தையும் ஈட்டித் தருகின்றன. இந்நிலையில், சாலை விரிவாக்கப் பணியின் காரணமாக அந்தியூர் - அம்மாபேட்டை வரை சாலையில் இருபுறமும் உள்ள சுமார் 500 க்கும் மேற்பட்ட புளிய மரங்களை வெட்டுவது என்று முடிவு செய்யப்பட்டு, மரங்களில் அடையாளம் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், பல இடங்களில் புளியமரங்கள் துண்டுத் துண்டாக வெட்டப்பட்டுள்ளன. பசுமையாகக் காணப்படும் பச்சை மரங்கள் வெட்டப்படுள்ளதைக் காணும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அம்மரங்களால் அரசுக்கு ஆண்டுதோறும் கிடைக்கப் பெற்ற புளியங்காய் ஏல வருமானமும் முழுமையாக பாதிக்கப்படும் நிலை
உருவாகியுள்ளது.
எனவே, இந்த மரங்களை வெட்டாமல் உயிருடன் பெயர்த்தெடுத்து வேறு இடத்தில் மீண்டும் நட்டு பாதுகாக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், பழைய மரங்கள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்கப் பணி நிறைவடைந்தவுடன், புதிய மரக்கன்றுகள் உடனடியாக நடப்பட்டு மீண்டும் பொதுமக்களுக்கு நிழலும், பலனும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பாக்கின்றனர்.