விநாயகர் சதுர்த்திக்கு தேவையில்லாத கட்டுப்பாடுகள் விதிப்பு: இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றச்சாட்டு
வழிபாடு தொடர்பாக ஆங்கிலேயர் ஆட்சியிலும்கூட இருந்திராத கட்டுப்பாடுகள் தற்போது விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு
வழிபாடு தொடர்பாக ஆங்கிலேயர் ஆட்சியிலும்கூட இருந்திராத கட்டுப்பாடுகள் தற்போது விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு விதிக்கப்பட்டுள்ளன என்று இந்து முன்னணி மாநிலச் செயலாளர் ஜெ.எஸ்.கிஷோர்குமார் குற்றம் சாட்டினார்.
ஈரோட்டில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநிலச் செயலாளர் ஜெ.எஸ்.கிஷோர்குமார் கூறியதாவது:
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட உள்ளன. ஈரோடு மாவட்டம் முழுவதும் 1,300 விநாயகர் சிலைகள் நிறுவப்பட உள்ளன. 38 ஆண்டுகளுக்கு முன்பு இந்து முன்னணியின் நிறுவனர் ராம.கோபாலன் ஒரே ஒரு சிலையை திருவல்லிக்கேணியில் பிரதிஷ்டை செய்து விநாயகர் சதுர்த்தியை மக்கள் விழாவாகக் கொண்டாடத் துவங்கினார். தற்போது தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். நிகழாண்டில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட 24 கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. மத வழிபாட்டு உரிமைகளில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. இந்தக் கட்டுப்பாடு தொடர்பாக அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சியில்கூட இதுபோல வழிபாடுகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு விதித்த 24 கட்டுப்பாடுகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவில் எத்தனை அடி உயரத்துக்கு சிலை வைக்க வேண்டும் என்பதை அரசு நிர்ணயிக்கக் கூடாது. ஊர்வலத்தில் 2 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று கட்டுப்படுத்தக் கூடாது. சாமானிய மக்களின் வழிபாட்டு உரிமையில் அரசு தலையிடக் கூடாது. சதுர்த்தி விழாவுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை அரசு திரும்பப் பெற வேண்டும்.
விநாயகர் சதுர்த்திக்குப் பயன்படுத்தும் விநாயகர் சிலைகளை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு காகிதக் கூழ், கிழங்கு மாவு ஆகியவற்றால் செய்துள்ளோம் என்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு, மாநில துணைத் தலைவர் கு.பூசப்பன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ப. ஜெகதீஷ் முன்னிலை வகித்தார்.
மாவட்ட பொதுச்செயலர் சக்திமுருகேஷ் , மாவட்ட, நகர, ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.