ஈரோட்டில் உள்ள கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 220 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில், அலுவலர்கள் அங்கு சென்று ஆய்வு நடத்தியபோது குட்கா, புகையிலை, பான்பராக் உள்ளிட்ட பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும், அப்பகுதியில் மளிகை உள்ளிட்ட பொருள்களை மொத்த வியாபாரம் செய்து வரும் கமலஹாசன் (44) என்பவர் வாடகைக்குப் பிடித்து வைத்திருக்கும் கிடங்கு என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த 220 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.