இளநிலை வழக்குரைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு பார் கவுன்சில் சங்கம், வழக்குரைஞர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து பார் கவுன்சில் சங்கத் தலைவர் சந்திரசேகரன், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வழக்குரைஞர்களுக்கு நீதிமன்றத்தில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும். பெண் வழக்குரைஞர்களுக்கு தனி கட்டடம், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். வழக்கறிஞர்களுக்கும் அவர்களது குடும்ப பாதுகாப்புக்கும் அரசு உத்திரவாதம் அளிக்க வேண்டும். வழக்குரைஞர்களுக்கு சொந்த வீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்ட உதவி மையம், சட்ட ஆலோசனைகளுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்குப் பதிலாக வழக்குரைஞர்களை நியமிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கும் மேல் நீதிமன்றங்களில் இளநிலை வழக்குரைஞர்களாக இருப்பவர்களுக்கு மாதம்தோறும் ரூ.10ஆயிரம் உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற இந்த நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈரோட்டில் 800 வழக்குரைஞர்களும், கோபி, சத்தி, பெருந்துறை, பவானி, கொடுமுடி என மாவட்டத்தில் உள்ளஅனைத்து நீதிமன்றங்களிலும் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.