ஈரோடு மாவட்டத்தில் கடந்த 13 நாள்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.40 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததன் அடிப்படையில் ரூ.23 லட்சம் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தாவது:
மக்களவைத் தேர்தல் அறிவிப்பு
மார்ச் 10 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் நடைமுறைபடுத்தப்பட்டு அலுவலர்கள் மூலம் பறக்கும் படை குழுக்கள், நிலைக் கண்காணிப்புக் குழுக்கள், விடியோ கண்காணிப்புக் குழுக்கள், விடியோ பார்வைக் குழுக்கள், கணக்குக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் ஈரோடு மக்களவைத் தொகுதி முழுவதும் முக்கிய இடங்களில் கண்காணித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
இதில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கோபிசெட்டிபாளைம், பவானி, அந்தியூர், பவானிசாகர் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட பறக்கும் படையினர் கடந்த 13 நாள்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட மொத்தம் ரூ.40,94,210 பறிமுதல் செய்தனர்.
இதில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.23,28,080 உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை உரிய ஆவணங்களை அளிக்காத ரூ.17,66,130 ரொக்கம் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.