ஈரோடு மாவட்ட காவல் அலுவலகம் முன்பு எலக்ட்ரீஷியன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே டி.ஜி.புதூர் நால் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சீலான்(28). எலக்ட்ரீஷியன். இவர் தனது தாய் சாவித்திரி (48), சகோதரி ஜீவா (26), சகோதரியின் மகன் மோனிஷ்குமார் (6) ஆகியோருடன் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்துக்கு புதன்கிழமை காலை வந்தார்.
அலுவலகத்துக்கு முன்பு நின்றிருந்த அவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் புட்டியை வெளியே எடுத்து தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.
இதைப்பார்த்ததும் அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் விரைந்து சென்று அவர்களிடம் இருந்த தீப்பெட்டியையும், மண்ணெண்ணெய் புட்டியையும் பறிமுதல் செய்தனர்.
அதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீஸார் மாவட்ட காவல் அலுவலகத்துக்குள் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தெரியவந்த விவரம்:
சீலானுக்கு நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த பெண்ணுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. அவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளான். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
அதைத்தொடர்ந்து சீலான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் முதல் மனைவி தனது மகனுடன் சீலானின் வீட்டில் அண்மையில் குடியேறினார்.
இதனால் தனது வீட்டை முதல் மனைவி அபகரித்துவிட்டதாக பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் சீலான் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் அங்கு உரிய விசாரணை நடத்தவில்லை என்றுக்கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க அவர் குடும்பத்துடன் வந்ததது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.