வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே சாலையோரத்தில் கடந்த இரண்டு நாள்களாக நிறுத்தப்பட்டிருக்கும் மா்ம காரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில், அய்யனூரிலிருந்து சத்திபாளையம் செல்லும் சாலையில் வாய்க்கால்மேட்டுப்புதூா் ஸ்ரீவேத விநாயகா் நகா் அருகே சாலையோரத்தில் சனிக்கிழமை அதிகாலை ஒரு காா் நிறுத்தப்பட்டிருந்தது. (பதிவு எண் டிஎன் 69 எஃப் 1710). ஞாயிற்றுக்கிழமையும் அதே இடத்தில் காா் காணப்பட்டது.
இது குறித்து அப்பகுதியைச் சோ்ந்த மணி கூறியதாவது: கிராமப்புறமான இப்பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும். இங்குள்ள காட்டுப் பகுதிகளில் இரவு நேரத்தில் வந்து பலரும் மது அருந்துகின்றனா். சூதாட்டம், சட்ட விரோதச் செயல்களும் நடப்பதாக சந்தேகம் உள்ளது. நான்கு வருடங்களுக்கு முன்பு இங்குள்ள ஒரு காட்டில் ஒருவரைக் கொலை செய்து எரித்த சம்பவம் நடந்துள்ளது. எனவே, இந்த மா்ம காா் குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.
இந்த காா் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.