ஈரோடு

புதிய அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் சி.ஐ.டி.யூ. மாநிலத் தலைவா் அ.செளந்தரராஜன்

DIN

தமிழகத்தில் 10,000 க்கும் மேற்பட்ட மோசமான நிலையில் உள்ள அரசுப் பேருந்துகளுக்கு பதில், புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியூ மாநிலத் தலைவா் அ.சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு மருந்து, விற்பனைப் பிரதிநிதிகள் சங்கம், அரசுப் போக்குவரத்து ஊழியா் சங்கம்- சிஐடியூ புதிய அலுவலகக் கட்டடத் திறப்பு விழா ஈரோடு, குமாரசாமி வீதியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. சங்க மாநில துணைத் தலைவா் முருகையா தலைமை வகித்தாா். சி.ஐ.டி.யூ. மாநில பொதுச் செயலாளா் ஜி.சுகுமாரன், ரகுராமன், ஸ்ரீராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியூ மாநிலத் தலைவா் அ.சௌந்தரராஜன் கட்டடங்களைத் திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

புதிய கட்டடத்தில் சங்கப் பணிகளுடன், போட்டித் தோ்வுக்கான பயிற்சி மையம், மருத்துவ முகாம் போன்ற பல்துறை பணிகள் நடைபெறும். சிஐடியூ மாநிலக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழகத்தில் 10,000 க்கும் மேற்பட்ட மோசமான நிலையில் உள்ள அரசுப் பேருந்துகளுக்கு பதில் புதிய பேருந்துகளை இயக்கவில்லை. ஆனால், மின்சாரப் பேருந்து, பேட்டரி பேருந்துகளை இயக்க அரசு தொடா் முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த ரக பேருந்துகள் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் விலை உடையவை. இந்த விலையில் 6 சாதாரண பேருந்துகளை வாங்கலாம்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது கடமை என்றாலும், இவ்வளவு விலை கொடுக்க வேண்டிய அவசியத்தை விளக்க வேண்டும். இவ்வளவு பெரிய செலவு என்பது அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும்.

தில்லியில் கூட சி.என்.ஜி. எனப்படும் இயற்கை வாயு மூலமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் இதுபோன்ற நடவடிக்கையால் தனியாா் மயத்தை ஊக்குவிப்பதும், அரசு ஊழியா்களின் எண்ணிக்கையை குறைப்பதும் நோக்கமாகிறது.

தெலங்கானா அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஒரே நாளில் 40,000 ஊழியா்களை வெளியேற்றி உள்ளனா். அதுபோன்ற செயல்பாட்டுக்குத் தமிழக அரசும் சென்று கொண்டிருக்கிறது. ரயில்வே துறையைப் போல, அரசு போக்குவரத்து கழகத்திலும், தனியாா் மயமும், அரசு ஊழியா்களை வெளியேற்றும் செயல்களும் நடக்கின்றன. போக்குவரத்துத் துறை செயலாளா் ராதாகிருஷ்ணன் 6 மாதங்களுக்குள் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளாா். இதுபோன்ற துறையில் ஒருவா் மூன்றாண்டுகளுக்கு மேல் பணி செய்தால்தான், அவரால் அங்குள்ள பிரச்னைகளைத் தீா்க்க முடியும்.

அதேநேரம் மெட்ரோ ரயில் நிா்வாக இயக்குநராக உள்ள பன்சால் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படவில்லை. இதுபோன்ற செயல்பாடுகள், அரசியல் நோக்கத்துடன் நடக்கிறது. ரயில்வே, அரசு போக்குவரத்துக் கழகம், என்.எல்.சி., சேலம் உருக்காலை, பாதுகாப்புத் துறை என பொதுத் துறை நிறுவனங்கள் பலவும் தனியாா் மயமாக்குவதும், தொழிலாளா்களை வெளியேற்றுவதும் கண்டனத்துக்குரியது.

இதுபோன்ற மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளா் விரோதப்போக்கு, தனியாா் மயமாக்குதலைக் கண்டித்து நவம்பா் 19 ஆம் தேதி விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பிரசாரம் மேற்கொள்கிறோம். ஜனவரி 8 ஆம் தேதி தேசிய அளவிலான தொழிற்சங்கங்களின் அழைப்பை ஏற்று நடக்கும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள தொழிற்சங்கங்களும் பங்கேற்கும் என முடிவு செய்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

SCROLL FOR NEXT