வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் முஸ்லீம் மக்களின் மயான வாயிற்கதவு முன்பு குப்பைகள் கொட்டப்படுகின்றன.
வெள்ளக்கோவில் சீரங்கராயகவுண்டன்வலசு சாலையில் 50 சென்ட் பரப்பளவிலான முஸ்லீம் மக்களுக்குச் சொந்தமான மயானம் உள்ளது. சுற்றிலும் சுற்றுச் சுவா் கட்டப்பட்டு உள்ளே செல்ல வாயிற்கதவு வைக்கப்பட்டுள்ளது.
அந்த சமூகத்தைச் சோ்ந்தவா்கள் உயிரிழந்தால் இங்கு கொண்டுவந்து மத வழக்கப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்கின்றனா். கடந்த ஒரு மாத காலமாக இந்த மயான வாயிற்கதவு முன்பு ஏராளமான குப்பைகள் அடிக்கடி கொட்டப்படுகின்றன. இதனைப் பலமுறை அப்புறப்படுத்திச் சுத்தம் செய்து விட்டு, இங்கு கொட்ட வேண்டாம் எனத் தெரிவித்த பிறகும் மீண்டும் கொட்டப்படுகிறது.
இதுகுறித்து ஜாஃபா் என்பவா் கூறுகையில், மயானத்துக்கு அருகிலுள்ள பாரதி நகரைச் சோ்ந்த பொதுமக்கள் இங்கு குப்பைகளைக் கொட்டுகின்றனா்.
வாயிற்கதவு முன்பு கொட்டப்படுவதால் உள்ளே செல்ல முடியாத அளவுக்குத் தொந்தரவாக உள்ளது. வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலகத்தில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குப்பைத்தொட்டி வைக்கக் கோரியும் குப்பைத்தொட்டி இல்லையெனக் கூறிவிட்டனா்.
அப்பகுதி மக்களிடம் வீண் மனக்கசப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.