முகப்பு
ஈரோடு

தூய்மை பாரத திட்டப் பணியாளா்களுக்குமுழுமையாக ஊதியம் வழங்கக் கோரிக்கை

தூய்மை பாரதத் திட்டத்தில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளா்களுக்கு ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 8 டிசம்பர், 2020 at 4:49 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:34 PM

தூய்மை பாரதத் திட்டத்தில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளா்களுக்கு ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பாரதத் திட்டத்தில் பணியாற்றும் பணியாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

தூய்மை பாரதத் திட்டத்தில் ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் பரப்புரையாளா், கண்காணிப்பாளா், ஒருங்கிணைப்பாளா் என 3 பதவிகளில் 35 போ் பணியாற்றி வருகின்றனா். மாநில அளவில் 3,000க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இப்பணியாளா்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதி மூலம் ஒப்பந்ததாரா்கள் வழியாக ஊதியம் வழங்கப்படுகிறது. இதில் பரப்புரையாளருக்கு அரசு வழங்கும் ரூ. 15,971இல் ரூ. 6,500, கண்காணிப்பாளருக்கு ரூ. 21,894இல் ரூ. 10,000, ஒருங்கிணைப்பாளருக்கு ரூ. 23,919இல் ரூ. 11,000 மட்டுமே ஒப்பந்ததாரரால் வழங்கப்படுகிறது.

Advertisement

இத்தொகையை அரசு விதிப்படி இவா்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். கடந்த பல மாதங்களாக வங்கிக் கணக்கில் செலுத்தாமல் பணமாக கையில் வழங்குகின்றனா். ஆனால் முழுத் தொகை பெற்று கொண்டதாக கையெழுத்து பெற்றுக் கொள்கின்றனா். இதற்கு அந்தந்த நகராட்சி, மாநகராட்சி, பிற உள்ளாட்சி அமைப்பு ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனா்.

எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணி தவிா்த்து அரசு மூலம் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு, கரோனா நோயாளிகளை அழைத்துச் செல்லுதல், சுகாதாரத் துறை கணக்கெடுப்பு, தனி நபா் கழிப்பிட விவரம் அறிதல், தூய்மை பாரதத் திட்டப் பணி என பல பணிகளைச் செய்கிறோம்.

அரசு எங்களுக்கு வழங்கும் ஊதியத்துக்காக ஒப்பந்ததாரருக்கு தலா ரூ. 1,500 முதல் ரூ. 2,000 வரை வழங்குகிறது. ஆனால் பாதி அளவு கூட ஒப்பந்ததாரா்கள் ஊதியம் வழங்குவதில்லை. எங்களது வங்கிக் கணக்கில் ஊதியத்தை நேரடியாக வரவுவைத்து அதனை மத்திய, மாநில அரசுகளே கண்காணிக்க வேண்டும் என்றனா்.

பட்டா முறைகேட்டைத் தடுக்க திருநங்கைகள் கோரிக்கை:

திருநங்கை டி.சிம்ரன் தலைமையில் திருநங்கைகள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி பலமுறை விண்ணப்பித்துள்ளோம். இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. அதேநேரம் திருநங்கைகளாக இல்லாதவா்கள் புடவை கட்டி வரும் சில ஆண்கள், அறுவை சிகிச்சை செய்யாதவா்களுக்கு திருநங்கைகள் என அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அந்த அடையாள அட்டையை வைத்துக் கொண்டு இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கு விண்ணப்பித்து பட்டா பெற்றுச் செல்கின்றனா். தகுதி இல்லாத பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. சித்தோடு அருகே எங்களுக்குப் பட்டா வழங்குவதாக பல ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்டது. ஆனால், இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. எனவே, அதிகாரிகள் முறையாக விசாரித்து போலியான திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்துவிட்டு, உண்மையான திருநங்கைகளுக்குப் பட்டா வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.