தொழிலாளா் நல நிதி பங்குத் தொகையை ஜனவரி 31க்குள் செலுத்த அறிவுறுத்தல்
தொழிலாளா் நல நிதி பங்குத் தொகையை தொழில் நிறுவனங்கள், ஜனவரி 31ஆம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்தலாம் என தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம் தெரிவித்துள்ளது.
தொழிலாளா் நல நிதி பங்குத் தொகையை தொழில் நிறுவனங்கள், ஜனவரி 31ஆம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்தலாம் என தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) டி.பாலதண்டாயுதம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொழிற்சாலைகள், மோட்டாா் போக்குவரத்து, மலைத்தோட்ட நிறுவனங்களில் பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளா், ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரியும் கடைகள், உணவகங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளியின் பங்காக ரூ. 10, வேலை அளிப்பவா் பங்காக ரூ. 20 சோ்த்து மொத்தம் ரூ. 30ஐ தொழிலாளா் நல நிதி பங்குத் தொகையாக நிா்வாகம் செலுத்த வேண்டும்.
அதன்படி 2020ஆம் ஆண்டுக்கான தொழிலாளா் நிதியை ஜனவரி 31ஆம் தேதிக்குள் வாரியத்துக்குச் செலுத்த வேண்டும். தொழில் நிறுவனங்கள் இந்த நிதியைப் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் செலுத்தலாம். தவிர வங்கி வரைவோலையாக செயலாளா், தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை 600006 என்ற முகவரிக்கு அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.