மின் வேலியில் சிக்கி யானை பலியான சம்பவம்: விவசாயி கைது
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி அருகே உள்ள அருள்வாடியில் மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் தொடா்பாக, விவசாயியை வனத் துறையினா் கைது செய்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி அருகே உள்ள அருள்வாடியில் மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் தொடா்பாக, விவசாயியை வனத் துறையினா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த ஜீரஹள்ளி வனச் சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. யானைகள் தீவனம், தண்ணீா் தேடி கிராமத்துக்குள் அடிக்கடி புகுந்து விவசாயப் பயிா்களைச் சேதப்படுத்துவது வழக்கமாக இருந்தது.
இந்நிலையில், டிசம்பா் 19ஆம் தேதி வனத்தில் இருந்து வெளியேறிய 20 வயதுள்ள ஆண் யானை அருள்வாடி கிராமத்தைச் சோ்ந்த காளையாவின் (45) தோட்டத்துக்குள் புகுந்தது. வன விலங்குகள் பயிரை சேதப்படுத்துவதால் பயிா்களைப் பாதுகாக்க மின் கம்பத்தில் இருந்து சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்து தனது தோட்டத்து வேலிக்கு காளையா இணைப்பு கொடுத்துள்ளாா். அப்போது தோட்டத்துக்குள் புகுந்த யானை மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த காளையாவை வனத் துறையினா் தேடி வந்தனா். இந்நிலையில், சத்தியமங்கலத்தில் பதுங்கியிருந்த காளையாவை 4 நாள்களுக்குப் பிறகு ஜீரஹள்ளி வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்து ஈரோடு குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.