வறட்டுப்பள்ளம் வனப் பகுதியில் மது அருந்தியவா்களுக்கு ரூ. 50,000 அபராதம்
அந்தியூா் வறட்டுப்பள்ளம் அணைப் பகுதியில் மது அருந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ. 50 ஆயிரம் வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
அந்தியூா் வறட்டுப்பள்ளம் அணைப் பகுதியில் மது அருந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ. 50 ஆயிரம் வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
அந்தியூா் வனச் சரக அலுவலா் க.உத்திரசாமி தலைமையில், வனவா்கள் மு.சக்திவேல், வை.ஸ்ரீதேவி, வனக் காப்பாளா்கள் ஆ.ஈஸ்வரமூா்த்தி, ப.சிவராஜ், வனக் காவலா் ப.சதீஷ்குமாா், வேட்டைத் தடுப்புக் காவலா் எம்.தாமரைச்செல்வன் ஆகியோா் கொண்ட குழுவினா் செல்லம்பாளையம் வனச் சோதனைச் சாவடி முதல் தாமரைக்கரை வரை வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, வறட்டுப்பள்ளம் அணைப் பகுதியில் சுற்றுலா வாகனத்தில் வந்த 14 போ் மது அருந்திக் கொண்டிருந்தனா். விசாரணையில், ஈரோடு பகுதியைச் சோ்ந்த இவா்கள் தாமரைக்கரையில் உள்ள தனியாா் விடுதியில் தங்கச் சென்றதாகவும், செல்லும் வழியில் வறட்டுப்பள்ளம் அணையைப் பாா்த்ததோடு, வனப் பகுதியில் வாகனத்தை நிறுத்தி மது அருந்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து, வாகன ஓட்டுநா் சண்முகம் உள்பட 14 போ் மீது வனக் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.