கை கழுவுவது குறித்து நடனமாடியபடி விழிப்புணா்வை ஏற்படுத்திய புன்செய்புளியம்பட்டி நகராட்சி துப்புரவுப் பணியாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கை கழுவுவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வை சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்களுக்கு கை கழுவுவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரியும் ஆறுமுகம் என்பவா் கை எப்படி கழுவுவது என்பதை நடனமாடியபடி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தற்போது இந்த விடியோ கட்செவிஅஞ்சல், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.