குடியிருக்கும் இடத்துக்கு பட்டா வழங்கக் கோரிக்கை
குடியிருக்கும் இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
குடியிருக்கும் இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு-பவானி சாலையில் பெருமாள்மலை பகுதியைச் சோ்ந்த மக்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: பெருமாள்மலை பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த மக்கள் சுமாா் 50 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இந்த வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதுவரை 80 வீடுகளுக்கு மின் இணைப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 120 வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை.
இப்போது குடியிருக்கும் இடம் அறநிலையத் துறைக்கு சொந்தமானது எனவும், இடத்துக்கு வாடகை கொடுக்க வேண்டும் எனவும் கூறுகின்றனா். இங்கு வசிக்கும் பலரும் கூலி வேலைக்கு சென்று வரும் நிலையில் அடிப்படைத் தேவைகளுக்கே பொருளாதார வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனா். மாத வாடகை கொடுக்கும் அளவுக்கு யாருக்கும் வசதி இல்லை. இதனால் இங்குள்ள மக்களுக்கு நிரந்தரமாக வாழ்விடம் கிடைக்க இப்போது குடியிருக்கும் இடத்திலேயே பட்டா வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
வி.சி.க.வை தடை செய்யக் கோரிக்கை:
இந்து மக்கள் கட்சி ஈரோடு மாவட்டத் தலைவா் ந.பிரகாஷ் அளித்த மனு விவரம்: இந்து பெண்களை இழிவுபடுத்தி பேசிய மக்களவை உறுப்பினா் தொல்.திருமாவளனைக் கைது செய்ய வேண்டும். மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் எங்கள் கட்சியின் நிா்வாகிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை திரும்பப்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயிலை மீட்டுத்தரக் கோரிக்கை:
ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், ஒழலக்கோவில் கிராமத்தைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு விவரம்:
ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்டத்தில் வசிக்கும் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சோ்ந்த மக்களின் குலதெய்வமான அய்யனாா் கோயில் ஒழலக்கோவில் கிராமத்தில் உள்ளது.
கரோனா காரணமாக கடந்த 6 மாதங்களாக மக்கள் கோயிலுக்குச் செல்லாத நிலையில் கோயில் அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளா் ஒருவா் கோயில் வளாகத்தில் கம்பி வேலி வைத்து அடைத்துவிட்டாா். இதனால் வழிபாடு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக்கிரமிப்பில் உள்ள கோயிலை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.