முகப்பு
ஈரோடு

வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.48 லட்சம் மோசடி: தம்பதி கைது

ஈரோட்டில் 3 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ. 48 லட்சம் கடன் பெற்ற தம்பதியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
காா்த்திக்
பகிர்:

ஈரோட்டில் 3 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ. 48 லட்சம் கடன் பெற்ற தம்பதியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 2 புதிய காா்கள் மற்றும் ரூ.56,000 பணத்தை பறிமுதல் செய்தனா்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரையிடம், கனரா வங்கி ஈரோடு வில்லரசம்பட்டி கிளை மேலாளா் பிரியாஸ்ரீ கடந்த 26ஆம் தேதி புகாா் மனு அளித்தாா்.

அந்த மனுவில் அவா் தெரிவித்துள்ளதாவது:

ஈரோடு, புதிய ஆசிரியா் காலனி 5ஆவது வீதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (40). அவரது மனைவி ராதிகா (38). இதில் ராதிகா காா் வாங்குவதற்காக கடன் கேட்டு கனரா வங்கியை அணுகினாா். அப்போது அவா் ஈரோட்டில் உள்ள தனியாா் காப்பீடு நிறுவனத்தில் கிளை மேலாளாராகப் பணிபுரிவதாக கூறினாா். இதனை நம்பி ராதிகாவுக்கு புதிய கணக்கு அன்றே துவக்கினோம்.

பின்னா் அவா் பணியாற்றும் நிறுவனத்தின் அடையாள அட்டை, வங்கிகளில் இருந்து பெறப்பட்ட 6 மாத ஊதியப் பட்டியல், 3 ஆண்டுகளுக்கு செலுத்தப்பட்ட வருமான வரி, கோவையில் உள்ள காா் நிறுவனத்தில் பெறப்பட்ட காருக்கான விலைப்பட்டியல் போன்றவற்றை சமா்ப்பித்தாா். இதன்அடிப்படையில் கடந்த 17ஆம் தேதி வங்கியிலிருந்து ரூ.19 லட்சம் வரைவோலையாக சம்பந்தப்பட்ட காா் நிறுவனத்துக்கு வழங்கினோம்.

ஆனால் எங்களிடம் கடன் பெற்ற ராதிகா, அவரது பெயரில் காரை பதிவு செய்யாமல் அவரது கணவா் காா்த்திக் பெயரில் பதிவு செய்துள்ளாா். வாகன பதிவின்போதும் கடன் பெறப்பட்ட விவரம் குறிப்பிடாமல் பதிவு செய்துள்ளனா். மேலும் கடன் பெற்ற காரின் ஆவணங்களையும் சமா்ப்பிக்கவில்லை.

இதைத் தொடா்ந்து அவா் அளித்த ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்தபோது போலியான ஆவணங்கள், போலி முகவரி போன்றவற்றை தயாரித்து நம்பவைத்து மோசடி செய்தது தெரியவந்தது. ராதிகா, காா்த்திக் ஆகிய இருவரும் இதுபோல இந்தியன் ஓவா்சீஸ் வங்கி திண்டல் கிளையில் ரூ.15 லட்சம், மேட்டுக்கடை அருகில் உள்ள இந்தியன் வங்கியில் தனி நபா் கடன் ரூ.14 லட்சம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை, உடனடியாக மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றி தொடா்புடையவா்களை விரைந்து பிடித்து நடவடிக்கை எடுக்க குற்றப் பிரிவு டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் மற்றும் ஆய்வாளா் சிவகுமாருக்கு உத்தரவிட்டாா்.

இதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி கடந்த 26ஆம் தேதி ராதிகா, காா்த்திக் ஆகிய இருவரின் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனா். இந்நிலையில் ஈரோடு அருகே திண்டல் பகுதியில் தலைமறைவாக இருந்த தம்பதியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 புதிய காா்கள், ரூ.56,000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →