பவானியில் பொதுவிநியோக அங்காடிகள் மூலம் முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்
தமிழக அரசின் சமூக பாதுகாப்பு திட்டமான முதியோர் ஓய்வூதிய தொகையினை பொது விநியோகத் திட்ட விற்பனையாளர்கள் மூலம் வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழக அரசின் சமூக பாதுகாப்பு திட்டமான முதியோர் ஓய்வூதிய தொகையினை பொது விநியோகத் திட்ட விற்பனையாளர்கள் மூலம் வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
பவானி நகராட்சிப் பகுதியில் 1,248 பயனாளிகளுக்கு ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பவானி கிளையிலும், அந்தியூர் ஒன்றியம், பர்கூர் ஊராட்சி மலைப்பகுதியில் ஓய்வூதியத் தொகை பெறும் 1,273 பயனாளிகளுக்கு அந்தியூர் கிளையிலும் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. முதியோர் ஓய்வூதியத் தொகை தமிழக அரசிடமிருந்து மாவட்ட நிர்வாகம் மூலம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்படுகிறது.
மத்திய கூட்டுறவு வங்கியில் பெறப்பட்ட தொகை இணைப்பு சங்கங்களின் பொது வினியோகத் திட்ட விற்பனையாளர்கள் மூலம் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நியாயவிலை கடைக்கு வந்து ஓய்வு உதவித் தொகை பெற முடியாதவர்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சென்று வழங்கப்படுகிறது.
மத்திய கூட்டுறவு வங்கி - இணைப்பு சங்கம் - பொது விநியோக அங்காடிகள் மூலம் ஓய்வூதியத் தொகை வழங்கும் நடைமுறை தமிழகத்திலேயே முதன்முறையாக ஈரோடு மாவட்டத்தில் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தை, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடக்கி வைத்தார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இத்திட்டம் படிப்படியாக பிற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.